search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவில் விழாவில் கோஷ்டி மோதல்"

    திருவாரூர் அருகே கோவில் திருவிழா தொடர்பான மோதலில் கல்வீசி தாக்கியதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் அருகே, குடவாசல் காவல் சரகம் காப்பணாமங்கலத்தில் பிடாரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் வைகாசி திருவிழா நடத்துவது தொடர்பாக அவ்வூரை சேர்ந்த இருதரப்பினரிடையே தகராறு இருந்து வருகிறது.

    இதில் ஒரு தரப்பை சேர்ந்த ஊர் பெரியவர்கள் திருவிழாவை அனைவரும் சேர்ந்து ஒருசேர நடத்துவோம் என்றும், மற்றொரு தரப்பை சேர்ந்த இளைஞர்கள் தனித்தனியாகவே நடத்த வேண்டும் என்றும் கூறி வருவதால் இருதரப்பினர் இடையே முன்விரோதம் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து ஆர்.டி.ஓ. தலைமையில் இரு தரப்பினரையும் அழைத்து சமரச பேச்சு வார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து திருவிழா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் ஒரு தரப்பினரை சேர்ந்த ஆசைமணி என்பவர் மோட்டார் சைக்கிளில் நேற்று வந்தபோது, மற்றொரு தரப்பை சேர்ந்த குமார் என்பவர் மீது மோதி விட்டாராம். இதையடுத்து அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. குமாருக்கு ஆதரவாக விஜயகுமார், இளவழகன், தசரதன், கார்த்தி ஆகியோர் ஆசைமணியிடம் தகராறு செய்துள்ளனர்.

    இதனால் ஆசைமணி தனது தரப்பை சேர்ந்த ராதாகிருஷ்ணன், ராஜா ராமன், கதிர், அருண் ஆகியோருக்கு போன் செய்து வரவழைத்தார். இதில் இருதரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றவே ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.

    இந்த தாக்குதலில் விஜயகுமார், குமார், ஆசைமணி ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்னர்.

    இந்த கல்வீச்சு தாக்குதல் சம்பவத்தின் போது அப்பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த 4 மோட்டார் சைக்கிள்கள் அடித்து உடைத்து சேதப்படுத்தப்பட்டன. இதுகுறித்து தகவல் அறிந்த குடவாசல் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    இந்நிலையில் குமார் தரப்பை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு சொந்தமாக பால் கடை ஒன்று உள்ளது. இந்த கடையின் முன்புறம் இருந்த சிறிய கீற்று கொட்டகைக்கு நேற்று இரவு தீ வைக்கப்பட்டது. இதையடுத்து அப்பகுதியை மக்கள் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்துக்கு காரணம் மற்றொரு தரப்பினர் என்று கூறப்படுகிறது.

    இதையடுத்து குடவாசல் போலீசார் குமார் தரப்பை சேர்ந்த இளவழகன், தசரதன், கார்த்தி ஆகிய 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் ஆசைமணி தரப்பை சேர்ந்த ராதாகிருஷ்ணன், ராஜா ராமன், கதிர், அருண் ஆகிய 4 பேரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மோதல் ஏற்படாமல் தடுக்கும் வகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    கோஷ்டி மோதலில் 4 பைக்குகள் சேதப்படுத்தப்பட்டதோடு 7 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வரும் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×